படித்தேன் பகிர்கிறேன் -2
பொத்தகப் பெயர் - பொய்யும் வழுவும்
ஆசிரியர் - பொ.வேல்சாமி
பதிப்பகம் - காலச்சுவடு பதிப்பகம்
ISBN: 978-93-80240-25-1
இது படித்தேன் பகிர்கிறேன் என்ற தொடரின் இரண்டாவது பாகம். பொ.வேல்சாமி, இணையத்தின் மூலம் அறிமுகமான எழுத்தாளர். காலச்சுவடு பதிப்பகத்தின் இணையத்தளத்தில் இவருடையக் கட்டுரைகளை
படிக்கலாம். இணைய அறிமுகத்திற்கு முன்னமே எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் எழுத்தின் மூலம் இவரைப் பற்றியறிய முடிந்தது. இந்த ஆண்டின் பொத்தகக் கண்காட்சியில் இவருடைய புத்தகங்களை தேடி வாங்கினேன்.
அவற்றில் இந்த பொய்யும் வழுவும், பொற்காலங்களும் இருண்டகாலங்களும் என்ற பொத்தகங்கள் என்னை வெகுவும் கவர்ந்தன. ஆசிரியர் நிறைந்த படிப்பாளியாகத் திகழ்வது மட்டுமின்றி, படித்த கருத்துக்களை உள்வாங்கி,
அதை தனக்கே உரித்தான முறையிலும், அந்த கருத்துக்களைப் பார்க்கும், எதிர் கொள்ளும் முறையிலும் அவர் தனித்து நிற்கிறார். உண்மையை மிக அனாவசியமாக கூறிச் செல்லும் பாங்கு பரமிக்க வைக்கிறது.
பொ.வேல்சாமி அவர்களின் கட்டுரைகளைத் தொகுத்துக் கூறுவதுதான் “பொய்யும் வழுவும்” என்ற நூல்.
கட்டுரை எண்.4 - சமண சமயமும் வடமொழியும் - பக்கம்.51 - 60
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தமிழ்மொழி பற்றிய தன்னுடைய ஆய்வுகளை நிலைப்படுத்துவதற்கு சமஸ்கிருதமொழியை அளவுகோலாக எடுத்துக் கொள்வது வழக்கம். இதேபோன்று மறைமலையடிகள்.
கா.சு.பிள்ளை, வெள்ளைவாரணனார், இராசமாணிக்கனார், பாவாணர் போன்றவர்களும் சமஸ்கிருத்தையே எதிர்மறையான அளவுகோலாகக் கைக்கொண்டனர். தொல்காப்பியத்திலிருந்து பாரம்பரியமாகக் குறிப்பிடப்பட்டு வரும் ‘வடமொழி’ என்பதை இவர்கள் அனைவரும் சமஸ்கிருதம் என்று அர்த்தப்படுத்திக் கொண்டனர். ஆனால், இவர்கள் சொல்லும் பொருளில் அச்சொல் தமிழ் நூல்களில் கையாளப்படவில்லை.
......................
வையாபுரிப்பிள்ளை தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் குறிப்பிடுகின்ற எண்வகை மெய்ப்பாடுகள் நாட்டிய சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளின் மொழி பெயர்ப்பே என்று கூறி நாட்டிய சாஸ்திரத்தை எழுதிய
பரதமுனிவரின் காலம் கி.பி.நான்காம் நூற்றாண்டென்பர். ஆகவே தொல்காப்பியத்தின் காலம் நான்காம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகும் என்று வரையறுக்கிறார்.
................
தன்னுடைய ’வடமொழி நூல் வரலாறு’ என்ற நூலில் பி.எஸ்.சுப்ரமணிய சாஸ்திரி கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரான தமிழ்த் தொல்காப்பியத்தில் உள்ள மெய்ப்பாட்டியல் சூத்திரங்களில் பல நாட்டிய சாஸ்திரத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டனவாகத் தோன்றுகிறது. ஆதலின் நாட்டிய சாஸ்திரம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னதாய் இருத்தல் வேண்டும் என்று கூறுகிறார்.
.............
ஐந்துவிதமான ஆராய்ச்சியாளர்கள் ஏழுவிதமான காலங்களைக் கூறிக்கொண்டிருக்கும் நாட்டிய சாஸ்திரத்தைத் தொகாப்பியத்தின் காலத்தைக் கணிக்க ஆதாரமாகக் கொள்வது சிறுபிள்ளை விளையாட்டா? ஆராய்ச்சியா?
..................
நாட்டிய சாஸ்திரம் எழுதப்பட்டிருக்கும் சமஸ்கிருத மொழியில் நூல்கள் உருவான காலம் எது என்பதில் பலருக்கும் கருத்து வேறுபாடு உண்டு. நவாலியூர் நடராஜன் தன்னுடைய வடமொழி இலக்கிய வரலாறு என்ற நூலில்(ப.37) கிறித்து பிறப்பதற்கு முன்னர் சில நூற்றாண்டுகளாகவும் அதற்குப் பின்னர் சில நூற்றாண்டுகளாகவும் வடமொழியில் சிறந்த இலக்கியங்கள் கிடைக்காத காரணத்தால் மாக்ஸ்முல்லரென்ற பேரறிஞர் இக்காலப் பகுதியில் இலக்கிய முயற்சியே நடைபெறவில்லையென்ற முடிவுக்கு வந்தார்.
அதனால் உலகியல் நூல்களாக காவியங்கள்கூடச் சமஸ்கிருதத்தில் எழுதப்படவில்லை. அவையெல்லாம் பிராகிருத மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டன என்றதொரு கொள்கையும் சில அறிஞர்களால் போற்றப்பட்டது. இதிகாசங்களும் அகத்துறைப் பாடலகளும் பஞ்சதந்திரம், பிருகத்கதை போன்ற கதைகளுங்கூட பிராகிருத மொழியிலிருந்தே சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தெழுதப்பட்டன என்ற கருத்து உருவாயிற்று என்கிறார். இந்த கருத்தை உறுதிப்படுதுவதாக கிரிநகர்ப் பிரதேசத்தில் கி.பி. 150இல் உருத்திரதாமன் என்ற அரசனால் கல்லில் செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு சமஸ்கிருத மொழியில் உள்ளது. சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ள முதல் கல்வெட்டு இதுதான். இந்தக் கல்வெட்டு
தோன்றுவதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட 89 கல்வெட்டுகள் கிடைக்கின்றன.
.......................
அன்று இந்தியாவில் வழங்கிய மொழிகள் தமிழ், பாலி, பிராகிருதம் ஆகிய மூன்று மொழிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில நூற்றாண்டுகள் கழித்துத்தான் சமஸ்கிருத மொழி இந்த வரிசையில் இடம்
பெறுகிறது.
.............
அப்படியென்றால் பழந்தமிழ் நூல்களில் வடமொழி என்று குறிப்பிடப்படுவது சமஸ்கிருதம் என்று தான் பல அறிஞர்கள் கூறி வருகின்றனர்.
............
உண்மையில் இங்கு வடமொழி என்பது தனியே சமஸ்கிருதத்தை மட்டுமல்ல, அது பாலி போன்ற பாகத மொழிகளையும் உள்ளடக்கும் என்று கூறுவார் சிவத்தம்பி. (கார்த்திகேசு சிவத்தம்பி -தொல்காப்பியமும் கவிதையும், ப.3) இதே கருத்தை தெ.பொ.மீ யும் கொண்டிருந்தார்.
.....
கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே தமிழ் மொழியைப் பயிலத் தொடங்கும் மாணவ, மாணவியர்க்கு (ஜைன மரபில் பெண்களும் கல்வி கற்றனர்) சமண மதம் சார்ந்த ஆசிரியர்கள் தமிழ் மொழியைக் கற்பித்து வந்தனர். அத்தகையப் பள்ளிக் கூடங்களில் தமிழ் மொழியிலுள்ள யாப்பு இலக்கணப் பகுதியைக் கற்பதற்கான பாடநூலாக ‘யாப்பருங்கலக்காரிகை’ என்ற நூல்தான் இருந்தது. இன்றும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம் படிப்பவர்கள் யாப்பு கற்பதற்கு யாப்பருங்கலக்காரிகையைத்தான் பாடநூலாக வைத்துள்ளனர்.
......
இந்தக் குறிப்பு பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலங்களில் தமிழ் பயின்ற மாணவ மாணவியருக்கு அன்றைய நிலையில் இந்தியாவின் மற்ற பகுதிகளில் சிறப்புற்றிருந்த பாலி, பிராகிருத, சமஸ்கிருத நூல்களை
ஒப்பிட்டு சமண சமயத்தினர் கல்வி கற்பித்து வந்தனர் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது. அதாவது அக்காலத்து தமிழ்மொழிப் பயிற்சி என்பது தமிழ் மொழியை மட்டும் கற்பிப்பதாக இல்லை. மற்ற மொழிகளின் துணையுடந்தான் தமிழைச் செம்மையாகப் புரிந்துகொள்ள முடியும் என்ற கல்விச் சூழல் இருந்ததை வெளிப்படுத்துகின்றது. இத்தகைய சூழல் தமிழ்நாட்டில் இங்குக் குறிப்பிடப்படுகின்ற காலத்துக்கு முன்பே சமணர்களால் பல நூற்றாண்டுகளாக நிலவி வந்திருக்கிறது என்பதை அடுத்துவரும் பகுதிகளில் பார்க்கலாம்.
..............
“சமண சமயம் இன்று தமிழ்நாட்டில் குறுகி இருந்தாலும் ஒரு காலத்துத் தமிழ்நாடு முழுவதும் சீரும் சிறப்புமாகப் பரவியிருந்தது என்பதற்குக் கல்வெட்டுகளும் வயல் ஓரத்திலும் மூலை முடுக்குகளிலும் காட்சியளிக்கும் சமண விக்கிரகங்களும் அமணப்பாக்கம், அருகத்துறை, நமண சமுத்திரம், ஜினாலயம், பஞ்சபாண்டவ மலை, அமண்குடி, சமணர் திடல், சமணமலை, அருகன்மங்கலம், பஸ்திபுரம் முதலிய இடங்களில் பெயர்களும் ஜைன மடத்தின் பெயராகிய பள்ளி என முடியும் இடப்பெயர்களும் இன்று சான்று பகர்கின்றன(ப.4) தொடர்ந்து சமணர்கள் தமிழகத்தில் செல்வாக்குடன் இருந்ததற்குக் கல்வெட்டுச் சான்றுகளையும் தெ.பொ.மீ. தருகின்றார். சம்பந்தர் முதலியோரால் சமணம் மறையவில்லை. தலைமை குன்றினாலும் சமணர் தமிழாராய்ச்சியும் சமணப் பிரசாரமும் செய்தே வந்தனர். சிந்தாமணி முதலிய நூல்களும் பின் தோன்றின.
..................
சமண சமயம் சார்ந்த தமிழர்கள் மிக நீண்ட காலமாகத் தமிழகத்தில் போற்றத்தக்க நிலையில் வாழ்ந்து வந்ததைக் கல்வெட்டுகளின் மூலமாகத் தெ.பொ.மீ கூறியதைப் பார்த்தோம். இதே போன்று சமணர்கள் தமிழ்நாட்டில்
எழுத்துக்கள் உருவான தொடக்க காலத்திலிருந்தே தமிழர்களில் வாழ்க்கையுடனும் இலக்கியம், பண்பாடு மற்ற நுண்கலைகளுடனும் மிக நீண்ட காலம் உயிர்ப்புடன் விளங்கி வந்தனர் என்பதைப் பலசான்றுகள் காட்டுகின்றன.
..............
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி எழுதப்பட்ட 89 பிராமிக் கல்வெட்டுகள் பின்னர் கி.பி.5ஆம் நூற்றாண்டுக் காலங்களில் மாற்றமடைந்த 21 வட்டெழுத்துக் கல்வெட்டுகள் போன்றவைகளை எடுத்துக்காட்டிப் பழந்தமிழ் நாட்டில் சமண சமயம் சார்ந்த தமிழர்களால்தான் தமிழ்நாட்டின் எழுத்துக் கலாச்சாரமும் கல்வி கற்பித்தல் போன்றவையும் தொடங்கி நடத்தப்பட்டன என்று ஐராவதம் மகாதேவன் நிறுவியுள்ளார். சமணர்களாகி விட்ட தமிழர்களின் “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்று எழுத்தறியாதிருந்த தமிழ் மக்களுக்குக் கல்விக் கண்களைத் திறந்து வைத்தனர். கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கியம், இலக்கண யாப்பு வளர்ச்சி, இசை, நாட்டிய வளர்ச்சி முதலான தமிழ்நாட்டுக் கலைகளெல்லாம் சமண சமயம் சார்ந்த தமிழ் மக்களால்தான் இயற்றப்பட்டும் பயிற்றுவிக்கப்பட்டும் போற்றிப் பாதுகாக்கப்பட்டும் வந்துள்ளன.
............
இவைகளைத் தொல்காப்பியம், திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, நீலகேசி, சேந்தன் திவாகரம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, நேமிநாதம், வீரசோழியம் (பெளத்தம்), நன்னூல் முதலான, சமணரால், இயற்றப்பட்ட நூல்கள் வரன் முறையாகக் காட்டுகின்றன. இந்த சீரான வரலாற்றைக் குலைப்பதற்காகவே 8.9ஆம் நூற்றாண்டுகளில் இறையனார் களவியல் எழுதப்பட்டதாக சிவத்தம்பி குறிப்பிடுகின்றார். பக்தி இயக்கத்தின் முன்னணியில் நின்ற சைவர்கள், வைணவர்கள் ஆகிய இரு பகுதியினருமே தமிழ் என்பது சைவர்க்கு அல்லது வைணவர்க்கு உரியது எனக் கொண்டிருந்தனர் என்பதனையும் திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வார் போன்றோர் சமணத்தினைக் குரோதத்துடன் எதிர்த்தனர் என்பதனையும் நாம் இவ்வேளை மனதில் இருத்திக் கொள்ளல் வேண்டும். இந்த பின்னணியிலேயே இறையனார் அகப்பொருள் உரையாசிரியரின் தெளிநிலையான இந்துச் சார்பினைக் கண்டுகொள்ளல் வேண்டும். ஐதீக (வைதீக) ஆக்கம் என்பது வரலாற்றினைத் தயாரிக்கும் ஒரு வகைமுறையாகும். இறையனாரகப்பொருள் உரையில் தரப்பட்டுள்ள சங்கம் பற்றிய கட்டுக்கதை தமிழை இந்துமயப்படுத்துவதற்கு ஆன முக்கியமாக, அதை சைவ மரபின் அங்கமாக ஆக்குவதற்கான ஒரு முயற்சியே ஆகும். இவ்வாறு நோக்கும்பொழுது தமிழ் இலக்கிய வரலாற்றில் இவ் வைதீகத்திற்கு உரிய இடம் பெருமுக்கியம் உடைய ஒன்றாகும்.
.................
வெளிப்படையாகச் சமண, பெளத்தச் சார்புடைய ஒரு நிறுவனத்தினை (சங்கத்தினை) எடுத்துக் கொண்டு அதற்கு ஓர் இந்து உருவும் பொருளும் கொடுக்கும் முயற்சியினை இக்கதையிலே காணலாம்.
இதேபோன்று இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியைக் கைப்பற்றிக் கொண்ட சைவ, வைணவ உயர்சாதித் தமிழர்கள் என்பவர்கள் தமிழ் மொழியிலுள்ள சமண, பெளத்த வரலாறுகள் தாங்கள் கைக்கொண்டு ஒழுகிவரும் இந்துக் கலாச்சாரத்துக்கும் சாதிய மேன்மைக்கும் முரணாக இருப்பதை விரும்பவில்லை. எனவே சமண சமயம் சார்ந்த வளையாபதி, குண்டலகேசி, தகடூர் யாத்திரை முதலான நூல்களை அச்சில் வரவிடாமல்
ஒழித்துக்கட்டினர். தங்களால் ஒழிக்க முடியாமல் நிலைபெற்றுவிட்ட நூல்களுக்குப் புதுவகையான வரலாற்றைப் படைப்பதில் ஈடுபட்டனர். புதுவரலாறு படைப்பதிலும் சிக்கல் தோன்றினால் ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்துகளை குழப்பிவிட்டனர். இப்படியான குழப்பத்தை அவர்கள் பல வழிகளில் நிறைவேற்றத் தொடங்கினர். மிக வெளிப்படையாகச் சமண நூல் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவற்றை இது சைவ நூலாகவும் இருக்கலாம் சமண நூலாகவும் இருக்கலாம் என்று குழப்பிவிட்டனர். மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெருங்கதை போன்ற நூல்களை இவர்களாக் குழப்ப முடியவில்லை. எனவே இவற்றை மணநூல் என்றும் காமத்தைப் பேசுபவை என்றும் இலக்கியம் அல்ல; தத்துவத்தைப் பேசுபவை என்றும் புறந்தள்ளினர். இத்தைய மனிதர்களின் ஆதிக்கத்தில்தான் இருபதாம் நூற்றாண்டின் முக்கால் பகுதிவரை தமிழ்மொழி சிறைப்பட்டிருந்தது.
........
வேறொருவகையான குழப்பத்தையும் தமிழ் வரலாற்றில் இவர்கள் உண்டு பண்ணினார்கள். இன்றைய நிலையில் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, தேவாரம், திருவாய்மொழி போன்ற தொகுப்பு நூல்கள் முன்னே குறிப்பிட்ட
சீரான சமண தமிழ் இலக்கிய வரலாற்றைக் குழப்பும் வகையில் உள்ளதாக இன்றைய தமிழ் மாணவர்களுக்குத் தென்படுகிறது. உண்மையில் எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் ஏறத்தாழ ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் எட்டாம்
நூற்றாண்டுக்குள் இந்து சமயம் சார்ந்த சைவர்களால் தொகுக்கப்பட்டதாகவே தெரிகிறது.
......
அதுமட்டுமல்லாது தொகுத்த சைவர்கள் வேண்டாமென்று ஒதுக்கிவிட்ட பாடல்கள் எவையென்பதும் எவ்வளவு என்பதும் நமக்குத் தெரியவில்லை. இதை வைத்துக் கொண்டு மிகப் பழைய காலத்திலிருந்தே சைவமும், வைணவமும் தமிழர்களிடம் நிலைபெற்றிருந்ததாக இவர்கள் வாதிடுகின்றனர். இந்தவாதம் இன்று ஒரு பொதுக்கருத்தாகவும்
மாறிவிட்டது.
......
எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும்போது தேவார திருவாய்மொழிப் பாடல்களில் மிகப் பழமையானவைகூட எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் பாடப்பட்டிருக்க முடியாது என்பது தெளிவாகின்றது. எனவே தமிழ் இலக்கிய,
இலக்கண வரலாற்றின் பழமையான ஆயிரத்து நூறு ஆண்டுகள் சமண பெளத்த சமயங்களின் கருத்துகளால்தான் வலுப்பெற்று வளர்ந்து வந்தன என்று நாம் குறிப்பிடலாம்.
.............
சைவ சமயம் சார்ந்த உயர்சாதித் தமிழர்கள்தான் தங்கள் அரசியல் லாபத்துக்காக இந்தச் சீரான வரலாற்று உண்மைகளைப் புரட்டியவர்கள் என்று நாம் கூறுவது தவறாக இருக்க முடியாது. இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் வேறு எந்த மொழியிலும் ஒரு குறிப்பிட்ட மொழி சார்ந்த மக்கள் (1100 ஆண்டுகள்) கி.மு.300 - கி.பி.800வரை தொடர்ச்சியாகத் தங்களுடைய இலக்கிய, இலக்கண, தத்துவ மரபுகளைப் பேணி வந்ததாக எந்தவிதமான தகவல்களும் இல்லை. சமணம் சார்ந்த தமிழ்மொழியின் உயிரோட்டமான இந்த வரலாற்று வளர்ச்சியைப் புறந்தள்ளிவிட்டுச் சாதியமும் வைதீகமும்
கலந்த புராணக் கற்பனைகளைத் தன்மேல் சுமத்திக் கொண்டது தமிழ்ச் சமூகம். இதன் விளைவாக இந்தியர்களுக்கு வரலாறே தெரியாது என்று மேனாட்டார் கூறிவந்த கருத்தை தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொண்ட அவல நிலை ஏற்பட்டது.
(இங்கு முழுக் கட்டுரையும் கொடுக்கப்படவில்லை. ஆசிரியரின் அனுமதியின்மையால் சிறு சிறு முக்கியக் குறிப்புகள் மட்டும் தரவுகளுக்காகத் தரப்படுகின்றன.)
இரா.பானுகுமார்,
சென்னை